ஈஸ்வரப்பா மீது மேலிடம் நடவடிக்கை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தகவல்
ஈஸ்வரப்பா மீது மேலிடம் நடவடிக்கை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தகவல்
ADDED : ஏப் 16, 2024 06:09 AM

ஷிவமொகா : ''ஈஸ்வரப்பாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை. அவர் மீது கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
ஈஸ்வரப்பா இதற்கு முன் அமைச்சராக, துணை முதல்வராக இருந்தார். பதவியில் இருந்த போது, ஷிவமொகாவுக்கு இவர் அளித்த பங்களிப்பு என்ன. ராகவேந்திரா இம்முறையும் வெற்றி பெறுவார். இவர் செல்வாக்கு பெற்ற எம்.பி., ஷிவமொகா மக்கள், ஈஸ்வரப்பாவுக்கு பாடம் கற்பிப்பர். இவரது பேச்சை மக்கள் கவனிக்கின்றனர்.
தன் மகன் காந்தேஷுக்கு, சீட் கிடைக்காததற்கு எடியூரப்பாவே காரணம் என, ஈஸ்வரப்பா குற்றம்சாட்டுகிறார். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, மாவட்டத்துக்கு என்னென்ன செய்தார், ராகவேந்திராவின் பங்களிப்பு என்ன என்பதை, மக்கள் பேசுகின்றனர். ஈஸ்வரப்பாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை. இவர் மீது கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்கிரசார் ஆர்ப்பாட்டமாக பிரசாரம் செய்கின்றனர். ஆனால் வாக்காளர்களின் உணர்வே வேறு. தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நற்பண்புகள், திறமை கொண்ட டாக்டர் மஞ்சுநாத்தை வெற்றி பெற வைக்க, மக்கள் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, உடல் ஆரோக்கியம் சரியில்லை. அவரது அரசியல் வாழ்க்கை முடிந்ததாக, காங்கிரசார் பிரம்மையில் உள்ளனர். குமாரசாமி மாண்டியாவில் களமிறங்கியுள்ளார். அவர் வெற்றி பெற்று, மத்திய அமைச்சரானால் தங்களின் செல்வாக்கு சரியும் என, காங்கிரசார் அஞ்சுகின்றனர். எனவே அவரது பெயரை குலைக்கும் வகையில் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

