வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர் 7 பேர் மாயம்: 10 பேர் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர் 7 பேர் மாயம்: 10 பேர் மீட்பு
ADDED : ஆக 27, 2024 12:34 AM

மோர்பி: குஜராத்தில், மழை வெள்ளத்தில் டிராக்டர் அடித்துச் செல்லப்பட்டு, அதிலிருந்த 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான ஏழு பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
குஜராத்தில் பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து வல்சாத், நவ்சாரி, சூரத், தாபி, நர்மதா, வதோரா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, அங்கு இருப்பவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
மோர்பி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் சூழலில், தவானா கிராமத்தில் தரைப்பாலத்தை 17 பேருடன் சென்ற டிராக்டர் கடக்க முயன்றது.
கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய டிராக்டர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதிலிருந்த 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்; மாயமான ஏழு பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், நவ்சாரி மாவட்டம் கெர்காமில் அதிகபட்சமாக 35.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
டாங்ஸ் மாவட்டத்தில் டாங் - அஹ்வாவில் 26.8 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.