கடன் தொல்லையால் விபரீத முடிவு; குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
கடன் தொல்லையால் விபரீத முடிவு; குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
ADDED : மார் 12, 2025 12:26 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தம்பதி, தங்களது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள ஹப்சிகுடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி, 46; இவரது மனைவி கவிதா, 36. தம்பதிக்கு, ஒன்பதாம் வகுப்பு படித்த மகளும், ஐந்தாம் வகுப்பு படித்த மகனும் இருந்தனர்.
தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த சந்திரசேகர ரெட்டி, கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். கடனை செலுத்த முடியாமல் தவித்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்திரசேகர ராவை, அவரது உறவினர் மொபைல் போனில் நேற்று முன்தினம் இரவு பலமுறை அழைத்தார்; அவர் எடுக்கவில்லை. வீட்டுக்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, படுக்கை அறையில், இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.
மற்றொரு அறையில் சந்திரசேகர ரெட்டியும், கவிதாவும் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள், மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, சந்திரசேகர ரெட்டி, கவிதா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
அதிக கடன் தொல்லை மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் தற்கொலை செய்ததாக, சந்திரசேகர ரெட்டி எழுதிய கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.