கார் மீது லாரி மோதி விபத்து கேரளாவில் ஐந்து பேர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து கேரளாவில் ஐந்து பேர் பலி
ADDED : மே 01, 2024 01:09 AM
கண்ணுார், கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தின் பரியாரம் என்ற பகுதி யில், நேற்று முன்தினம் இரவு சென்ற கார் மீது, பின்னால் வந்த லாரி மோதியது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான கார், லாரியின் அடியில் சிக்கி இருந்ததால், உள்ளே இருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதற்குள், மீட்புக்குழுவினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை உடைத்து உள்ளே இருந்த நபர்களை மீட்டனர். எனினும், அவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய இரண்டு லாரி டிரைவர்களையும் கைது செய்தனர்.
இதற்கிடையே விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காசர்கோடு மாவட்டத்தின் பீமநடி பகுதியைச் சேர்ந்த சுதாகரன், 52, என்பவர் சி.ஏ., படிக்கும் தன் மகனை, விடுதியில் இறக்கி விட்டு, தன் மனைவி அஜிதா, 35, மாமனார் கிருஷ்ணன், 65, உறவினர் மகன் ஆகாஷ், 9, கார் டிரைவர் பத்மகுமார், 52, ஆகியோருடன் காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.