ADDED : ஆக 20, 2024 11:28 PM
தட்சிண கன்னடா : கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் கல்லுாரி மாணவர்களை கடத்தித் தாக்கியது தொடர்பாக, மற்றொரு கல்லுாரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறியதாவது:
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் யெனபோயா கல்லுாரி கால்பந்து அணிக்கும்; அலாய்சியஸ் கல்லுாரி கால்பந்து அணிக்கும் இடையே ஆக., 14ல் நகரின் நேரு மைதானத்தில் போட்டி நடந்தது.
போட்டியின்போது, இரு அணி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. பயிற்சியாளர்கள் சமாதானப்படுத்தினர்.
ஆக., 19ம் தேதி, மாலை 6:15 மணியளவில், பாண்டேஸ்வரா போரம் மால் அருகில், 17 வயதுள்ள யெனபோயா கல்லுாரி கால்பந்து அணி மாணவர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த, அலாய்சியஸ் கல்லுாரி கால்பந்து அணி மாணவர் ஒருவர், மற்ற மாணவர்களுக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த ஐந்து பேர், யெனபோயா கல்லுாரி மாணவர்களை தாக்கி, காரில் கடத்திச் சென்றனர். காரில் செல்லும்போது, அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் ஒரு மாணவரை, அரை நிர்வாணமாக்கி தாக்கி உள்ளனர். பின், அவர்களை வென்லாக் மருத்துவமனை அருகில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தியான், 18, சல்மான், 18, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

