ADDED : மே 16, 2024 04:38 AM
தாவணகெரே : முன்விரோதத்தில் பாக்கு மரங்களை வெட்டியதால், கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண்ணை கொன்று, உடலை கால்வாயில் வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஷிவமொகா ஹொலேஒன்னுார் அருகே அரகெரே கிராமத்தில் வசித்தவர் நேத்ராவதி, 47. கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். கடந்த 7ம் தேதி பசவபட்டணா அருகே பிலாய்ச்சி கிராமத்தில் ஓடும், பத்ரா கால்வாயில் பிணமாக மிதந்தார். அவரது கழுத்தில் கயிறு சுற்றி இருந்ததால், கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, உடலை கால்வாயில் வீசியது தெரிந்தது.
ஹொலேஒன்னுார் போலீசார் விசாரித்தனர். நேத்ராவதிக்கும், அரகெரே கிராமத்தின் குமார், 45, சித்தானந்தப்பா, 42 ஆகியோருக்கும் இடையில் முன்விரோதம் இருந்தது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு இருவரையும் பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். நேத்ராவதியை கொன்றதை ஒப்புக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம் காரணமாக குமார், சித்தானந்தப்பா தோட்டங்களில் இருந்த பாக்கு மரங்களை, கடந்த 3ம் தேதி நேத்ராவதி அரிவாளால் வெட்டி உள்ளார். இதை பார்த்த இருவரும், நேத்ராவதியிடம் தகராறு செய்து உள்ளனர். ஆத்திரத்தில் துண்டால் கழுத்தை இறுக்கி கொன்று, உடலை கால்வாயில் வீசியதும் அம்பலமானது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
***