ஹரிஷ் கவுடாவுக்கு 'ஹனி டிராப்' பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
ஹரிஷ் கவுடாவுக்கு 'ஹனி டிராப்' பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
ADDED : ஜூன் 27, 2024 06:50 AM

பெங்களூரு : சாமராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடாவை, 'ஹனி டிராப்' முறையில் மிரட்டி, பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைசூரு சாமராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா, 51.கடந்த மாதம் பெங்களூரு சி.சி.பி., போலீசில் மர்ம நபர்கள் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தேன். அந்த அறைக்கு ஒரு பெண் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டுவிட்டு, அந்த அறையில் இருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், என் மொபைல் நம்பருக்கு, இரண்டு மொபைல் நம்பர்களிலிருந்து தொடர்பு கொண்டு பேசும் மர்ம நபர்கள், ஹோட்டலில் நீங்களும், பெண்ணும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் எங்களிடம் உள்ளது.
அதை வெளியிடாமல் இருக்க, நாங்கள் கேட்கும் போதெல்லாம் கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என மிரட்டுகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த புகாரின்படி, சி.சி.பி., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.ஹரிஷ் கவுடாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, மைசூரை சேர்ந்த சந்தோஷ், புட்டராஜ் ஆகிய இருவரை, நேற்று முன்தினம் இரவு சிசிபி போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.