ADDED : மே 09, 2024 11:36 PM

மூணாறு : கொட்டாரக்கரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகானம் புலிபாறை அருகே 600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் இருவர் பலியாயினர். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
கேரளா திருவனந்தபுரம் நாவாய்குளம் பகுதியைச் சேர்ந்த ஷிபு 51, அவரது மனைவி மஞ்சு 43, மகன் ஆதிதேவ் 21, மகள்கள் பத்ரா 18, பாக்யா 12, மஞ்சுவின் சகோதரி சிந்து 45, ஆகியோர் இடுக்கி மாவட்டம் வாகமண்ணுக்கு காரில் சுற்றுலா வந்தனர். ஷிபு காரை ஓட்டினார்.
சுற்றுலாவை முடித்து திரும்புகையில் கொட்டாரக்கரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகானம் புலிபாறை பகுதியில் நேற்று மதியம் 3:45 மணிக்கு சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து ஏற்பட்ட பகுதி பாறை என்பதால் கார் உருக்குலைந்து நொறுங்கியது. விபத்தில் சிந்து, பத்ரா பலியாயினர். மற்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். சம்பவத்தின் போது கோடை மழையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. ஷிபு, மஞ்சு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர்.