ADDED : மார் 28, 2024 07:31 AM

கோல்கட்டா : மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் பயணியருடன் சென்ற, 'ஏர் இந்தியா' மற்றும், 'இண்டிகோ' விமானங்கள் ஒரே ஓடுபாதையில் உரசிக்கொண்ட சம்பவத்தில், பயணியர் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.
கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து, பீஹாரின் தர்பங்கா நோக்கி, இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. அதேபோல் மற்றொரு புறம் சென்னை நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.
பயணியருடன் சென்ற இரு விமானங்களும், ஒரே ஓடுபாதையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தின்போது, விமானங்களில் இருந்த பயணியர், அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில், இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால், அதில் இருந்த பயணியர் கீழே இறக்கி விடப்பட்டனர்.
அதன்பின், மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சற்று காலதாமதத்துடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோல்கட்டா விமான நிலையத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

