ஹரித்வாரில் ஹிந்து முறைப்படி இரு ரஷ்ய தம்பதியர் திருமணம்
ஹரித்வாரில் ஹிந்து முறைப்படி இரு ரஷ்ய தம்பதியர் திருமணம்
ADDED : செப் 15, 2024 11:54 PM

ஹரித்வார்: ஹிந்து சம்பிரதாயங்கள் மீது ஈர்க்கப்பட்ட இரண்டு ரஷ்ய தம்பதியர், வேத மந்திரங்கள் முழங்க, அக்னியை வலம் வந்து ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
உத்தரகண்டின் ஹரித்வாரில் உள்ள அகண்ட பரம் தாம் ஆசிரமத்திற்கு வெளிநாட்டு பயணியர் ஆண்டுதோறும் ஆன்மிக சுற்றுலா வருவது வழக்கம். இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்து யோகா, தியானம் உள்ளிட்டவற்றை கற்று செல்கின்றனர்.
அந்த வகையில் ஹரித்வார் வந்த ரஷ்ய பயணியரில் இரு தம்பதியர், ஹிந்து சம்பிரதாயங்கள் மீது ஈர்க்கப்பட்டு ஹிந்து முறைப்படி நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த இரு தம்பதியருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரு தம்பதியரும், இந்திய முறைப்படி ஆடை அணிந்து, மலர் மாலையுடன் வந்தனர்.
உறவினர்களும் இந்திய பாரம்பரிய ஆடைகளை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர். மணப்பெண்கள் இருவரும் கைகளில் மருதாணி அணிந்திருந்தனர்.
வேத மந்திரங்கள் முழங்க, அக்னியை ஏழு முறை வலம் வந்து, தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். ஹிந்து முறைப்படி செய்யப்படும் திருமண பந்தம், ஏழேழு ஜென்மங்கள் தொடரும் என்ற நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
ஹரித்வாரில், ரஷ்ய தம்பதியர் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவை சேர்ந்த மூன்று தம்பதியர், ஹிந்து முறைப்படி இதே ஆசிரமத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

