ADDED : ஜூலை 06, 2024 02:27 AM
ஜெய்த்பூர்: தென்கிழக்கு டில்லியில் ஒரு கும்பல் சரமாரியாக நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.
ஜெய்த்பூர் பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு சிறு பிரச்னைக்காக ஒரு கும்பல், இருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த காட்சியில், இருவரையும் தாக்கிய கும்பலில் ஒருவர் கையில் செங்கற்களை ஏந்தியவாறு இருக்கிறார். தாக்குவதை தடுக்க முயன்ற ஒரு பெண்ணை அந்த கும்பல் கீழே தள்ளிவிடுகிறது.
இந்த காட்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். புதன்கிழமை இரவு 10:00 மணியளவில் ஜெய்த்பூர் மெயின் சவுக்கில் இந்த சம்பவம் நடந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
ஜெய்த்பூரில் வசிக்கும் ஆகாஷ் குமார், 21, அவரது நண்பர் விஷால், 24, ஆகிய இருவரும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்ட போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காண தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.