ADDED : ஜூலை 13, 2024 07:16 AM

பெங்களூரு : ''காங்கிரஸ் அரசை கண்டித்து, சட்டசபையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டாக போராட்டம் நடத்தும்,'' என, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடகாவில் வரும் 15ம் தேதி மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. இதை முன்னிட்டு, பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில், மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசின் தோல்விகளை குறிப்பிட்டு திணறடிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
பின், மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியதாவது:
காங்கிரஸ், ஆட்சிக்கு வந்த நாள் முதலே, முறைகேட்டில் மூழ்கி உள்ளது. விவசாயிகள் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனாலும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதை கண்டித்து, சட்டசபையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டாக போராட்டம் நடத்தும்.
முதல்வரே சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார். ஒரு பக்கம் மூடா முறைகேடு, மறு பக்கம் வால்மீகி மேம்பாட்டு வாரிய முறைகேடு, இன்னொரு பக்கம் எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது என, ஏதாவது ஒரு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது.
டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வறட்சி, மழை பாதிப்பு விவசாயிகளுக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. சட்டம் - ஒழுங்கு சரியில்லை.
வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வேறு. இதனால் அரசுக்கு தேவையில்லாத செலவு தான் ஏற்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.