அரிசி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்
அரிசி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்
ADDED : ஆக 01, 2024 11:14 PM

'அன்னபாக்யா திட்டத்துக்கு, கர்நாடக அரசு அரிசி கேட்டால், அரிசி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அரசு அன்னபாக்யா திட்டத்துக்கு, அரிசி கேட்டால் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. முறைப்படி கோரிக்கை வந்தால், கூடுதல் அரிசி வழங்கும். கிலோவுக்கு, 28 ரூபாய் விலையில் அரிசி வழங்கும்.
கர்நாடகா மட்டுமின்றி, எந்த மாநில அரசுகள் அரிசி கேட்டாலும், அரிசி வழங்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. கடந்தாண்டு கர்நாடக அரசு அரிசி கேட்ட போது, நாடு முழுதும் வறட்சி சூழ்நிலை இருந்தது.
கர்நாடகாவை போன்று, மற்ற மாநிலங்களும் அரிசி கேட்டால் பிரச்னை ஏற்படும் என்பதால், அரிசி வழங்க வேண்டாம் என, மத்திய அரசு முடிவு செய்தது.
தற்போது நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது. அதிக விளைச்சலை எதிர்பார்க்கிறோம்.
எனவே எந்த மாநிலங்கள் அரிசி கேட்டாலும், கிலோவுக்கு 28 ரூபாய் விலையில் அரிசி வழங்கப்படும்.
தற்போதைக்கு அரிசி வேண்டும் என, எந்த மாநிலத்திடம் இருந்தும், கோரிக்கை வரவில்லை.
நாட்டின் 80 கோடி மக்களுக்கு, ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி வழங்குகிறோம். இதற்கு முன் மாநிலங்களுக்கு, அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அரிசியை விற்று சேமிப்பை காலியாக்கி விட்டால், அவசர சந்தர்ப்பத்தில் அரிசி இல்லாத நிலை ஏற்படும்.
இதை மனதில் கொண்டே, கர்நாடக அரசு பலமுறை கோரியும், அரிசி இல்லையென மத்திய அரசு கூறியது.
'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவிடம் ராஜினாமா வலியுறுத்தி, பா.ஜ., பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட நாங்களும் பாதயாத்திரையில் பங்கேற்போம். கட்சி தலைவர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னாலுடனும் பேச்சு நடத்தியுள்ளோம்.
கவர்னர் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர். இவர் மீது காங்கிரசாருக்கு பயம் ஏன். வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைத்திராவிட்டால், ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. முதல்வருக்கும் ஊழலில் தொடர்புள்ளது.
பயம், பதற்றத்துடன் பேசுகிறார். மூடா ஊழல் தொடர்பான ஆவணங்களை, அவரது கட்சி தலைவர்களே கொடுத்துள்ளனர்.
பா.ஜ., அரசு ஊழல் செய்ததாக, முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார். அவரது அரசே உள்ளது. விசாரணை நடத்தட்டும். அதை விட்டு விட்டு அனைவரையும் மிரட்டி, காங்கிரசின் ஊழல்களை மூடி மறைக்க முடியாது.எந்த சமுதாய தலைவராக இருந்தாலும், ஊழல் செய்திருந்தால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். விசாரணையே நடத்தக்கூடாது என்றால் எப்படி.
முறைகேடு நடந்திருப்பதை, முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன் கவர்னரை, காங்கிரஸ் தலைவர்கள் புகழ்ந்தனர். இப்போது இகழ்கின்றனர். பா.ஜ., அரசில் ஊழல் நடந்திருந்தால், விசாரணை நடத்துங்கள் என, எங்கள் கட்சியின் மாநில தலைவரே சவால் விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர்-\.