ஹோட்டல் உரிமையாளர்களின் விபரங்களை பெயர் பலகையில் எழுத உ.பி., அரசு உத்தரவு
ஹோட்டல் உரிமையாளர்களின் விபரங்களை பெயர் பலகையில் எழுத உ.பி., அரசு உத்தரவு
ADDED : ஜூலை 20, 2024 12:30 AM
லக்னோ : உத்தர பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், டீக்கடைகளின் பெயர் பலகையில், உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது, 'கன்வார்' யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரை, உ.பி., - உத்தரகண்டில் ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்தாண்டுக்கான யாத்திரை வரும் 22-ல் துவங்கி, ஆக., 6-ல் முடிகிறது. உத்தரகண்டின் ஹரித்வார், ரிஷிகேஷ் அல்லது உ.பி.,யின் பாக்பட் என்ற இடத்தில் உள்ள மகாதேவ் சிவன் கோவிலுக்கு, சிவ பக்தர்கள் செல்வது வழக்கம்.
'கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், டீக்கடைகளின் பெயர் பலகையில், அதன் உரிமையாளர் பெயர் இடம் பெற வேண்டும்' என, உ.பி.,யின் முசாபர்பூர் போலீசார் சமீபத்தில் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை போலீசார் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிறப்பித்த உத்தரவு:
மாநிலத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், டீக்கடைகளின் பெயர் பலகைகளில், அவற்றின் உரிமையாளர் பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள், கட்டாயம் இடம்பெற வேண்டும்.
'ஹலால்' சான்றிதழுடன் பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யக் கூடாது. கன்வார் யாத்திரை மேற்கொள்வோரின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி., அரசின் இந்த உத்தரவுக்கு, காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உ.பி., அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டிலும், இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அரசியலமைப்பிற்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர்களை பொருளாதார ரீதியாக ஒதுக்கி வைக்கும் முயற்சி. இதை திரும்ப பெற வேண்டும்.
மாயாவதி,
பகுஜன் சமாஜ் தலைவர்
இது முற்றிலும் நடைமுறைக்கு எதிரானது. சகோதரத்துவ உணர்வை சீர்குலைக்கவும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர்.
அஜய் ராய்,
காங்., தலைவர், - உ.பி.,
பா.ஜ., அரசின் இந்த உத்தரவுக்கு பின்னால் உள்ள நோக்கம் என்ன? மக்களிடையே வெறுப்புணர்வை பரப்ப பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர். இது குறித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
அகிலேஷ் யாதவ்,
சமாஜ்வாதி தலைவர்