ADDED : ஏப் 01, 2024 11:43 PM
எதுவும் நடக்கலாம்!
தான் இட்டதே சட்டம்னு கை கட்சியில் பலரை அடையாளம் இல்லாமல் ஆக்கியவர் இவர். இவரின், மருமகனுக்கு தேர்தல் 'சீட்' வாங்கி கொடுக்க படாத பாடுபட்டார். கிடைக்காததால் விரக்தியில் உள்ளார்.
நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணுன்னு கடந்த தேர்தல் முடிவு போன்றே இம்முறையும் முடிவு இருக்கும் என கோலார் கை கட்சியினர் இப்பவே 'ஷாக்' கில் இருக்காங்க. எட்டு சட்டசபைத் தொகுதிகளிலும் பணத்தை தண்ணீராக செலவிட இருந்தாராம்.
ஆனாலும், சீட் கிடைக்காமல் போனதன் விளைவால், மருமகனை போட்டி வேட்பாளராக களத்தில் இறக்க ஒரு தரப்பில் பேச்சு நடத்தி இருக்காங்க. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரை எது வேண்டுமானாலும் நடக்குமாமே.
மருமகன்கள் ஆதிக்கம்!
கோலாரில் கை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோளாறு, சரிப்படுத்த முடியாமல் உள்ளது. பூவும், புல்லுக்கட்டும் இணைந்துள்ள இத்தேர்தலில், புல்லுக்கட்டுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க தயார் ஆகிட்டாங்க.
மாநில அரசின் தலைமை செயலரின் மருமகன் தான், கோலார் புல்லுக்கட்டு வேட்பாளர். மருமகன்களை அரசியலில் கரை சேர்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. ஏற்கனவே புல்லுக்கட்டு தேசிய தலைவர் தொட்ட கவுடர் மருமகனுக்கு பூ கட்சியில் 'சீட்' வாங்கிட்டாங்க.
கலபுர்கியில் கை கட்சியின் தேசிய தலைவர் மருமகனுக்கு 'ஓகே' ஆகியிருக்கு. சாம்ராஜ் நகரில் முன்னாள் மத்திய மந்திரியின் மருமகன், கை பக்கம் சாஞ்சிட்டாரு.
ஆள் இழுப்பு படலம்!
முல்பாகல்காரரும், சீனிவாசப்பூர்காரரும் கை கட்சியில் சேருவதற்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அணுகி இருக்காங்க. சற்று பொறுமையாக இருக்கும்படி, அவங்க கேட்டுக் கொண்டாங்க.
லோக்சபா தேர்தலில் இவங்க இருவருமே கை பக்கம் செயல்பட ரகசிய பேச்சு நடந்திருக்கு. கை ஓட்டுகள் சிறிதளவும் சரியாமல் தடுக்க, முதல்வரின் அரசியல் செயலர் பார்வையில் செயல் வீரர்களை களத்தில் இறக்க போறாங்களாம்.
அசெம்பிளி தேர்தலில் 81,000 ஓட்டுகளை, கோல்டு சிட்டியில் கை கட்சியினர் பெற்றிருந்தனர். மாவட்டம் முழுதும், தான் கட்சியை வளர்த்ததாக தேய்ந்த ரெக்கார்டை போட்டு வருகிறார். ஆனா, கோல்டு சிட்டியில் கட்சி அலுவலகத்தை கூட அவர் ஏற்படுத்தலையே. இதுக்கு என்ன பதில் தர போறாரோ?
