துாங்கும் வசதியுடைய வந்தே பாரத் ரயில் ரெடி! :இந்தாண்டு இறுதிக்குள் இயக்கப்படும்
துாங்கும் வசதியுடைய வந்தே பாரத் ரயில் ரெடி! :இந்தாண்டு இறுதிக்குள் இயக்கப்படும்
ADDED : செப் 02, 2024 01:21 AM

பெங்களூரு: சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் துாங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளை, பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., எனப்படும் மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். இந்தாண்டு இறுதிக்குள் இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுதும் 100 நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இதில் சேர் கார், எக்சிகியூடிவ் கார் என அமரும் வசதியிலான இரண்டு வகை இருக்கைகள் மட்டுமே உள்ளன.
தற்போது இவை, 400 கி.மீ., முதல் 800 கி.மீ., துாரம் உடைய நகரங்களுக்கு இடையே பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இரவில் பயணித்து, காலையில் ஊருக்கு சென்றடையும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை பரிசீலித்த ரயில்வே அமைச்சகம், கடந்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் இறங்கியது.
இந்த பணி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம், வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகளை தயாரித்துள்ளது. அந்த பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய ரயிலை வடிவமைப்பது மிகவும் சிக்கலான வேலை. வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது நடுத்தர வர்க்கத்தினருக்கான ரயிலாக இருக்கும். கட்டணங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரசுக்கு இணையாக இருக்கும். தற்போது, வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த ரயில், சில தொழில்நுட்ப வசதிகள் சரி பார்க்கப்பட்ட பின், ஒரு மாதத்துக்குள் சென்னை, ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு சோதனை ஓட்டம் நடத்திய பின், ரயில் சேவை துவங்கும். முதல் ரயில் சேவை இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்.
அதன் பின் ஸ்லீப்பர் பெட்டிகளின் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மாதத்துக்கு இரண்டு ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். தற்போது செயல்பாட்டில் உள்ள வந்தே பாரத் ரயிலின் அனுபவத்தில் இருந்து அதை மேலும் மேம்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.