ADDED : ஏப் 11, 2024 05:35 AM

ஹாவேரி: ''கர்நாடகாவில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அது உலகின் எட்டாவது அதிசயம். லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், அந்த கட்சி காலியாகும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:
சூரியன், சந்திரன் இருப்பது, எவ்வளவு சத்தியமோ, அதே போன்று ஹாவேரி தொகுதியில் பசவராஜ் பொம்மையின் வெற்றியும் உறுதி. அவர் மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
அம்பேத்கர் உயிருடன் இருந்தபோதே, காங்கிரசார் அவரை இம்சித்தனர். இரண்டு முறை அம்பேத்கரை தோற்கடித்தனர். பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. ஒரு நாளும் விடுமுறை எடுக்காமல், அவர் பணியாற்றுகிறார். இது இரண்டு ஜாதிகளுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல.
இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும். மாநிலத்தில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அது உலகின் எட்டாவது அதிசயம். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரஸ் காலியாகும். மோடி கொடுத்த அரிசி மூட்டையில், தன் போட்டோவை ஒட்டி, முதல்வர் சித்தராமையா பிரசாரம் செய்கிறார்.
ஒன்பது மாதங்களில், மாநிலத்துக்கு காங்கிரஸ் அரசு அளித்த பங்களிப்பு என்ன? விவசாயிகள் 800க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டும், முதல்வருக்கு கருணை இல்லை. பெண்களை பற்றி முதல்வர் கண்ணீர் விடுகிறார். தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

