ADDED : மார் 22, 2024 05:52 AM

ஷிவமொகா: ''லோக்சபா தேர்தல் முடிவு, ஜூன் 4ல் வெளியாகிறது. அதன்பின் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தன் பதவியை ராஜினாமா செய்வார்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆரூடம் கணித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
ஷிவமொகா தொகுதியில், எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவேன். நான் வெற்றி பெற்ற பின், மாநில தலைவர் பதவியை விஜயேந்திரா ராஜினாமா செய்வார்.
மாநில தலைவரை நியமிக்க, ஆறு மாதம் தாமதம் செய்தது ஏன். விஜயேந்திராவை மாநில தலைவராக்க, பா.ஜ., மேலிடம் தயாராக இல்லை. எடியூரப்பாவின் பிடிவாதத்தால், அவரது மகனை பதவியில் அமர்த்தினர்.
எடியூரப்பாவை போன்று, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், கர்நாடகாவில் பிரபலமான லிங்காயத் தலைவர். இவரை ஏன் மாநில தலைவராக நியமிக்கவில்லை. தமிழகம், கோவா, மஹாராஷ்டிரா பா.ஜ., பொறுப்பாளியாக பணியாற்றிய ரவி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை ஏன் மாநில தலைவராக்கவில்லை.
எடியூரப்பா கட்சியின் நலனை விட, தன் குடும்ப நலனுக்கு முக்கியத்துவம் தருகிறார். இவருக்கு லிங்காயத், ஒக்கலிகர் அல்லது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும், மாநில தலைவராக கூடாது. தன் மகன் மட்டுமே பதவியை அலங்கரிக்க வேண்டும் என, விரும்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

