இறுதிகட்ட லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?
இறுதிகட்ட லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?
ADDED : மே 01, 2024 03:48 AM

சென்னை : லோக்சபா தேர்தலில், இறுதி கட்டமாக நடத்தப்படும் ஏழாம் கட்ட ஓட்டுப்பதிவுடன், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, அத்தொகுதி, ஏப்ரல், 6 முதல் காலியாக உள்ளது. அதன் விபரத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.
தற்போது நாடு முழுதும் லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், 26ம் தேதி நடந்தது. மூன்றாம் கட்ட தேர்தல், வரும் 7ம் தேதி நடக்க உள்ளது. ஏழாம் கட்ட தேர்தல், ஜூன் 1ல் நடக்க உள்ளது.
ஏழாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை, தேர்தல் ஆணையம் வரும் 7ல் முறைப்படி அறிவிக்க உள்ளது. அன்றைய தினம், வேட்பு மனு தாக்கல் துவங்கும்; ஜூன் 1ல் ஓட்டுப்பதிவு நடக்கும். அதேபோல், அந்த தேதியில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தால், அதற்கு முன்னதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பின், வரும் 7ல் மனு தாக்கல் துவங்கப்பட்டு, ஜூன் 1ல் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்த தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு உள்ளன. இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை, தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும்.
ஏழாம் கட்ட லோக்சபா தேர்தலுடன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவதாக இருந்தால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஏனெனில் ஏழாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மே 7ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினமே, வேட்பு மனு தாக்கல் துவங்கி விடும்.
தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு, குறைந்தபட்சம், 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். எனவே, இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால், உடனடியாக தனி அறிவிப்பு வெளியிடப்படும். இல்லையெனில் லோக்சபா தேர்தலுக்கு பின் தனியே அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.