விநாயகர் ஊர்வலத்தில் வெடித்தது வன்முறை மாண்டியாவில் கடைகளுக்கு தீ; 54 பேர் கைது
விநாயகர் ஊர்வலத்தில் வெடித்தது வன்முறை மாண்டியாவில் கடைகளுக்கு தீ; 54 பேர் கைது
ADDED : செப் 13, 2024 02:13 AM

மாண்டியா, மாண்டியா, நாகமங்களாவில் விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தால் பதற்றம் நிலவுகிறது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைத்த 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில், முதல்வர்சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க, வாகனங்களில் நேற்று முன்தினம் இரவு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
பதரிகொப்பலு என்ற இடத்தில், ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென விநாயகர் ஊர்வலத்தில், மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். ஊர்வலத்தில் வந்தவர்கள் சிதறி ஓடினர்.
பின், ஒரு கும்பல்கையில் வாள், அரிவாளுடன் நடுரோட்டில் நின்று மிரட்டல் விடுத்தது. அடுத்த சில வினாடிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
துணிக்கடை நாசம்
கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் ஒரு துணிக்கடை, ஏழு பைக், ஒரு கார், ஒரு ஆட்டோ, தள்ளுவண்டிகள் எரிந்து நாசமாகின. கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி, நாகமங்களா விரைந்தார். போலீஸ் படை குவிக்கப்பட்டது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி மதியம் வரை, 54 பேரை கைது செய்தனர்.
ஆனால், அப்பாவிகளை கைது செய்து இருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரியும், கைதானவர்களின் உறவினர்கள் நாகமங்களா போலீஸ் நிலையம் முன், நேற்று காலை போராட்டம் நடத்தினர்.
எஸ்.பி., கூறுகையில்,“நாகமங்களாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது; 40 சதவீத கடைகள் திறக்கப்பட்டு உள்ளன,” என்றார். ஆயினும், நாகமங்களா டவுன், ரூரல் பகுதிகளில் நேற்றும் பதற்றம் நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, புதிய சட்டத்தின்படி 163 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.
கடும் கண்டனம்
நாகமங்களாவில் நடந்த கலவரத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளன.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், “நாகமங்களாவில் கலவரம் நடக்கவில்லை. அங்கு நடந்தது தற்செயலான சம்பவம். இருதரப்பிலும் கல்வீசி உள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்,” என்றார்.
முதல்வர் சித்தரா மையா, 'எக்ஸ்' பதிவில், 'நாகமங்களாவில் அமைதியை சீர்குலைக்கும் செயல் நடந்து உள்ளது. குற்றம் சாட்டபட்டவர்கள் மதம் எதுவாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
'யாருடைய துாண்டுதலுக்கும் அடிபணியாமல், அமைதியை கடைப்பிடித்து எங்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி, நாகமங்களா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்' என தெரிவித்து உள்ளார்.