விவாகரத்து வழக்கில் காத்திருப்பு காலம் அவசியமில்லை: கோர்ட்
விவாகரத்து வழக்கில் காத்திருப்பு காலம் அவசியமில்லை: கோர்ட்
ADDED : ஆக 06, 2024 11:50 PM

மும்பை, விவாகரத்து வழக்கு களில், ஆறு மாதம் காத்திருப்பு காலம் பின்பற்றுவதை, வழக்கின் தன்மைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும் என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த தம்பதிக்கு, 2021ல் திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே இவர்கள் பிரிந்து, தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். விவகாரத்து வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என, நீதிமன்றம் கூறியது.
இதை எதிர்த்து, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிபதி கவுரி காட்சே தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
விவாகரத்து வழக்குகளில், ஒரு தரப்புக்கு அநீதி கிடைத்து விடக்கூடாது மற்றும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்ற நோக்கத்தில், ஆறு மாதம் காத்திருப்பு முறை உள்ளது.
ஆனால், தற்போது சமூக சூழ்நிலைகள் மாறி வருகின்றன. மக்கள் வாழ்க்கை முறை மிகவும் வேகமாக உள்ளது.
காலத்துக்கு ஏற்ப, சட்ட நடைமுறைகளிலும் மாற்றங்கள் தேவை. விவாகரத்து வழக்குகளில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு மற்றும் பரஸ்பரம் புகார்கள் இருக்கலாம்.
அதுபோன்ற நேரத்தில், அவர்களது மனதை அமைதிப்படுத்தும் நோக்கத்துடன், ஆறு மாதம் காத்திருப்பை பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில் இவர்கள், பரஸ்பரம் சம்மதத்துடன் விவாகரத்து கோரியுள்ளனர். நன்கு ஆலோசித்து, ஆராய்ந்தே இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.
அதனால், காத்திருப்பு காலத்தை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளில், சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.