அரசு ஹெலிகாப்டர் பயன்படுத்தினாரா? பாண்டியனிடம் ஒடிசா அரசு விசாரணை
அரசு ஹெலிகாப்டர் பயன்படுத்தினாரா? பாண்டியனிடம் ஒடிசா அரசு விசாரணை
ADDED : ஆக 14, 2024 12:13 AM

புவனேஸ்வர் : ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி உதவியாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன், அரசு ஹெலிகாப்டர்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பா.ஜ., அரசு, விசாரணையை துவங்கி உள்ளது.
விருப்ப ஓய்வு
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளராக இருந்தவர், தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன். இவர் முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
அதன்பின், பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்து, நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை வழிநடத்தினார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டார். இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததை அடுத்து அரசியலில் இருந்து பாண்டியன் ஒதுங்கினார்.
இந்நிலையில், ஒடிசா முதல்வருக்கு நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அரசு ஹெலிகாப்டர்களை மிக அதிக அளவில் பாண்டியன் பயன்படுத்தியதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து மாநில வர்த்தக மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விபூதி பூஷன் ஜெனா கூறுகையில், “கடந்த 2020 பிப்., முதல் 2023 டிச., வரை, அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மாநிலம் முழுதும் பாண்டியன் பயணித்துள்ளார்.
''அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியது யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்,” என்றார்.
கடந்த 2023ல் மட்டும், ஒடிசாவின் 30 மாவட்டங்களில் உள்ள 190 இடங்களுக்கு ஹெலிகாப்டரில் பாண்டியன் பயணித்து மக்கள் குறை கேட்டதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
அப்போது, மக்களிடம் இருந்து 57,442 புகார் மனுக்கள் பெறப்பட்டதாகவும், 43,536 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிஜு ஜனதா தள தரப்பு தெரிவிக்கிறது.
“பாண்டியனின் ஹெலிகாப்டர் பயணத்துக்காக ஒடிசாவில், 450 ஹெலிபாட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. ஒரு ஹெலிபேட் கட்ட, 3 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தது,” என, மாநில சட்ட அமைச்சர் ப்ரித்விராஜ் ஹரிசந்தன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பிஜு ஜனதா தள மூத்த தலைவர் சம்பித் ரவுத்ரே, “முதல்வர் சார்பாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணித்த பாண்டியன், மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினார். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒன்றும் இல்லாத விஷயத்தை எல்லாம் பா.ஜ., அரசு பெரிதாக்கி வருகிறது,” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில பா.ஜ., அரசு விசாரணையை துவங்கியுள்ளது.