ADDED : மே 03, 2024 07:20 AM

ஷிவமொகா: ஷிவமொகா சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரப்பாவின் ஷிகாரிபுரா தேர்தல் அலுவலகம் முன், சூனியம் செய்யப்பட்ட பூஜை பொருட்கள் இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஷிவமொகா லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் ராகவேந்திரா, காங்கிரஸ் சார்பில் கீதா சிவராஜ்குமார், சுயேச்சையாக ஈஸ்வரப்பா போட்டியிடுகின்றனர். மூன்று பேருமே அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனால் ஷிவமொகாவில் இம்முறை மும்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து வேட்பாளர்களும் சட்டசபை தொகுதி வாரியாக சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும், மூன்று பேருமே தனி தனி அலுவலகங்கள் திறந்துள்ளனர். இதற்கிடையில், ஷிகாரிபுராவில் உள்ள ஈஸ்வரப்பாவின் தேர்தல் அலுவலகம் முன், நேற்று காலை பூஜை செய்யப்பட்ட பொருட்கள் காணப்பட்டன. ஊதுபத்தி, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம், பூஜை செய்யப்பட்ட ஒரு பொம்மை போன்ற பொருட்கள் இருந்தன.
அலுவலகத்தை திறக்க வந்த தொண்டர்கள் இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஈஸ்வரப்பாவுக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து, அவர் கூறுகையில், ''நான் வெற்றி பெற கூடாது என்பதற்காக, என்னுடைய அரசியல் விரோதிகள் சூனியம் செய்துள்ளனர். இத்தகைய செயல்பாட்டால் கவலைப்படுபவன் நானல்ல,'' என்றார்.