பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ராணுவ தளபதி திட்டவட்டம்
பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ராணுவ தளபதி திட்டவட்டம்
ADDED : ஜூலை 21, 2024 12:13 PM

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைச் சமாளிப்பதற்கும், அமைதியைப் பேணுவதற்கும் ஆயுதப் படைகளும், பாதுகாப்பு படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்' என ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உறுதியளித்தார்.
கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. எல்லை தாண்டிய ஊடுருவல்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து காஷ்மீரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில், பி.எஸ்.எப்., வீரர்கள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாவுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பயங்கரவாத நடவடிக்கைகளைச் சமாளிப்பதற்கும், அமைதியைப் பேணுவதற்கும் ஆயுதப் படைகளும், பாதுகாப்பு படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்' என சின்ஹாவுக்கு ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உறுதியளித்தார்.
அப்போது, 'எல்லை தாண்டிய ஊடுருவலை தடுத்து நிறுத்த பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களை அழிக்க, நன்கு திட்டமிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் துவங்க வேண்டும்' என மனோஜ் சின்ஹா வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஜூன் 30ம் தேதி இந்திய ராணுவத்தின் 30வது தளபதியாக பொறுப்பேற்ற மூன்று வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக காஷ்மீருக்கு உபேந்திர திவேதி வந்துள்ளார்.