ADDED : ஜூலை 20, 2024 12:26 AM
டேராடூன்: உத்தரகண்டில், 'ஹோம்ஸ்டே' எனப்படும், வீட்டில் தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்ய, அம்மாநில அரசு சார்பில், பிரத்யேக இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.
உத்தரகண்டில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணியரை கவரவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உத்தரகண்டிற்கு வரும் சுற்றுலாப் பயணியர், ஹோம்ஸ்டே முன்பதிவு செய்ய, www.uttarastays.com என்ற பிரத்யேக இணையதளத்தை அம்மாநில அரசு துவங்கி உள்ளது.
அரசு சார்பில், ஹோம்ஸ்டே சேவைக்கு துவங்கப்படும் முதல் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் ஹோம்ஸ்டே உரிமையாளர்களுக்கு, ஒருங்கிணைப்பு கட்டணங்கள், பயன்பாட்டு கட்டணங்கள் விதிக்கப்பட மாட்டாது. மேலும் அவர்கள், வருமானத்தை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.
இந்த இணையதளத்தில், 5,000 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு தேவையான வீடுகளை, பயனர்கள் எளிதில் முன்பதிவு செய்யலாம். உத்தரகண்டில், தீன்தயாள் உபாத்யாய் ஹோம்ஸ்டே திட்டத்தின் கீழ், ஹோம்ஸ்டேக்களை மேம்படுத்த, அம்மாநில சுற்றுலாத் துறை மானியம் வழங்குகிறது.
இதுகுறித்து, சுற்றுலாத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து ஹோம்ஸ்டே உரிமையாளர்களும், இந்த பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'எதிர்காலத்தில், இந்த ஹோம்ஸ்டேக்களில், யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் பஞ்ச் கர்மா போன்ற ஆரோக்கிய சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.