ADDED : பிப் 22, 2025 04:02 AM

பெங்களூரு : பெங்களூரில் கையில் கத்தி உட்பட கூர்மையான ஆயுதங்களுடன் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து ஊர்வலமாக சென்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ம் தேதி பெங்க ளூரு கே.ஜி., ஹள்ளியில் இருந்து டி.ஜே., ஹள்ளி வரையிலும்; ராமமூர்த்தி நகரில் இருந்து ஹொஸ்கோட் சுங்கசாவடி வரையிலும் சில இளைஞர்கள், இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்தபடியேசென்றனர்.
அப்போது, அவர்கள் கையில் கத்தி உட்பட கூர்மையான ஆயுதங்களுடன் கூச்சலிட்டபடி வந்தனர். இந்த சத்தத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சிலர், இதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம்செய்தனர்.
இதை பார்த்த நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து, 18 முதல் 22 வயது வரையிலான நயீம் பாஷா, அராபத், சஹில் ஹுசேன், நஜ்மத், அத்னன் பாஷா, நியாமதுல்லா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் ஏழு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடி வருகின்றனர்.
வீலிங் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், வீலிங் செய்வது அதிகரித்து வருகிறது. தரவுகளின்படி, '2024ல் 532; 2023ல் 219; 2022ல் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில், மைனர் சிறுவர்கள் மீதான வழக்குகளும் அதிகரித்து வருகிறது. 2023ல் 23; 2023ல் 74, 2024ல் 121 என, மைனர்கள் மீது வழக்குகள்பதிவாகியுள்ளன.

