ADDED : ஆக 29, 2024 02:26 AM
எலஹங்கா : 'ஆன்லைன்' விளையாட்டில், பணத்தை இழந்ததால், வீட்டை விட்டு ஓடிய மகனை கண்டுபிடித்து தரும்படி, போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு, டி.தாசரஹள்ளியில் வசிப்பவர் நாகராஜ்; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி கவுரம்மா. இவர்களின் மகன் வருண், 18. இவர் எலஹங்காவின், சேஷாத்ரிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., படிக்கிறார்.
ஆன்லைன் கேம்களுக்கு, வருண் அடிமையாக இருந்தார். இதில், 20,000 ரூபாயை இழந்தார். பெற்றோர் திட்டுவர் என, பயந்து, வீட்டில் பெற்றோர் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பீதியடைந்த அவர்கள், பாகல்குன்டே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் பல கோணங்களில் தேடியும், வருணை கண்டுபிடிக்க முடியவில்லை.
தங்களது ஒரே மகன் காணாமல் போனதால், தாயும், தந்தையும் உண்ணாமல், உறங்காமல் மகனை தேடுகின்றனர். 'பணம் போனால் போகிறது. மகனை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள்' என, தினமும் போலீஸ் நிலையத்திற்கு வந்து மன்றாடுகின்றனர்.

