ஏன் கண்ணீர் சிந்தினார் தேவகவுடா? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி!
ஏன் கண்ணீர் சிந்தினார் தேவகவுடா? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி!
ADDED : ஏப் 24, 2024 02:52 AM

பெங்களூரு : “தேவகவுடா கண்ணீர் சிந்தும் அளவுக்கு, யார் என்ன செய்தனர்? அவரை காங்கிரஸ் பிரதமராக்கியது. இப்போது அவர் கண்ணீர் விடுவது ஏன் என்று தெரியவில்லை,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
தேவகவுடாவை முதல்வராக்கியது, ஹாசன் மாவட்டம் அல்ல. ராம்நகர் மற்றும் பெங்களூரு ரூரல் மாவட்டங்கள். அவரை பிரதமராக்கியது காங்கிரஸ் கட்சி. அவர் கண்ணீர் விடும் சூழ்நிலை ஏற்படவில்லை. அவருக்கு தன் பங்களிப்பு குறித்து கூற எதுவும் இல்லை. அவர் என்ன முயற்சித்தாலும், அதிக தொகுதிகள் கிடைக்காது.
வறட்சி நிவாரணம் விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தில் மாநிலத்துக்கு நியாயம் கிடைத்துள்ளது. மத்திய அரசும் நிவாரணம் வழங்க சம்மதித்துள்ளது. எங்கள் அரசு, மக்களிடம் பிக்பாக்கெட் அடித்ததாக, பா.ஜ.,வினர் விளம்பரம் கொடுத்துள்ளனர். அவர்கள் செய்துள்ள பிக்பாக்கெட்டுகளை எங்கள் மீது சுமத்துகின்றனர்.
எங்கள் அரசு, மின் கட்டணத்தை குறைத்துள்ளது. யூனிட்டுக்கு 1.10 ரூபாய் குறைக்கப்பட்டது. 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அவர்களின் விளம்பரத்தை கண்டு வெட்கமாக இருக்கிறது. எங்களின் 'சொம்பு' விளம்பரத்தை, பா.ஜ.,வினரால் ஜீரணிக்க முடியவில்லை.
நாங்கள் இன்று, நேற்று அரசியலுக்கு வரவில்லை. கொரோனா நேரத்தில், இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்தோம். மக்களுக்கு இலவச அரிசி, மருந்துகள் வழங்கினோம். இதை மக்கள் நினைவுகூர்கின்றனர்.
தேர்தல் என்பதால், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவ்வப்போது, கர்நாடகாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் வரட்டும். நாங்கள் வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.
'இண்டியா' கூட்டணியின் எங்கள் நண்பர், விடுதலை சிறுத்தைகள் தலைவர், தமிழகத்தின் மூத்த எம்.பி.,யான திருமாளவன், எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளார். இவரது கட்சி சார்பில் பெங்களூரு ரூரலில் சந்திரசேகர், கோலாரில் வேணு, பெங்களூரு தெற்கில் ராஜகுமார் களமிறங்கினர். தற்போது இவர்கள் போட்டியில் இருந்து விலகி, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுரேஷுக்கு, திருமாவளவன் நெருக்கமானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

