தேர்தலுக்கு முன் கைது செய்தது ஏன்? கெஜ்ரிவால் பற்றி சுப்ரீம் கோர்ட் கேள்வி
தேர்தலுக்கு முன் கைது செய்தது ஏன்? கெஜ்ரிவால் பற்றி சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : மே 01, 2024 02:13 AM
புதுடில்லி :லோக்சபா தேர்தலுக்கு முன் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால், மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரது நீதிமன்ற காவல், வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
பின் நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:
வாழ்வும், சுதந்திரமும் மிக முக்கியமானது. அதை நீங்கள் மறுக்க முடியாது.
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறையினர் தங்களுக்கு சில தரவுகள் கிடைத்ததாகக் கூறியிருந்தனர்.
ஆனால், கெஜ்ரிவால் வழக்கில் அவ்வாறு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
ஒருவேளை அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த விஷயத்தில் கெஜ்ரிவால் எவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதை கூறுங்கள்.
அதுமட்டுமின்றி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும்.
விசாரணை துவக்கத்துக்கும், கைதுக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்பதையும் விளக்குங்கள். அடுத்த விசாரணையில் இதற்கான பதிலை அமலாக்கத் துறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.