மோதல் போக்கு முடிவுக்கு வருமா? மாலத்தீவு அதிபரை சந்தித்த ஜெய்சங்கர்
மோதல் போக்கு முடிவுக்கு வருமா? மாலத்தீவு அதிபரை சந்தித்த ஜெய்சங்கர்
ADDED : ஆக 10, 2024 11:36 PM

மாலே: இந்தியா, மாலத்தீவுக்கு இடையேயான நட்புறவு, பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சியை உறுதி செய்யும் என, அந்த நாட்டு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தபோது, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
தெற்காசிய நாடான மாலத்தீவின் அதிபராக, சீன ஆதரவாளரான முகமது முய்சு கடந்தாண்டு டிச.,ல் பதவியேற்றார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை திரும்பப்பெற அவர் உத்தரவிட்டார்.
இதைத் தவிர, சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவை விமர்சித்து, அந்நாட்டின் அமைச்சர்களாக இருந்த மூன்று பேர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, சீனாவுடன் முகமது முய்சு நெருக்கம் காட்டினார். இதனால் இந்தியர்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்ததால், அந்த நாட்டுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தியாவுடனான உறவைத் தொடர்வதற்கான முயற்சிகளில் மாலத்தீவு ஈடுபட்டது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முகமது முய்சு இந்தியா வந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம், அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து, விரிவாக ஆலோசனை செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் காசன் மாமூனை நேற்று சந்தித்தார்.
அதிபர் முகமது முய்சுவை நேற்று சந்தித்து, பிரதமர் மோடியின் செய்தியை வழங்கினார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையேயான சிறப்பான நட்பு, பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், மத்திய அரசின் கடனுதவியுடன் நிறைவேற்றப்பட்ட 913 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் மற்றும் சுகாதார திட்டங்களை அமைச்சர் ஜெய்சங்கர் துவக்கினார்.