வால்மீகி ஆணைய முறைகேடு கைகொடுக்குமா? சண்டூரில் வெற்றிக்கொடி நாட்ட பா.ஜ., தீவிரம்!
வால்மீகி ஆணைய முறைகேடு கைகொடுக்குமா? சண்டூரில் வெற்றிக்கொடி நாட்ட பா.ஜ., தீவிரம்!
ADDED : ஜூலை 15, 2024 06:21 AM

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டை பயன்படுத்தி, இடைத்தேர்தல் நடக்கும் சண்டூரில் வெற்றி கொடி நாட்ட பா.ஜ., தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
கர்நாடக அரசியலுக்கும், பல்லாரி மாவட்டத்திற்கும் பிரிக்க முடியாத தொடர்புள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கடந்த 1999 லோக்சபா தேர்தலில் பல்லாரியில் இருந்து வெற்றி பெற்றார்.
காங்., கோட்டை
பல ஆண்டுகளாக பல்லாரி மாவட்டம், காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. கடந்த 2004ல் இருந்து, பல்லாரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., தொடர்ந்து வெற்றி பெற்றது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசின் துக்காராம் வெற்றி பெற்று, பல்லாரியை மீண்டும் காங்கிரசுக்கு மீட்டுக் கொடுத்தார்.
துக்காராம் சண்டூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
கடந்த 1957ல் இருந்து 2023 வரை சண்டூர் தொகுதி 15 சட்டசபை தேர்தல்களை சந்தித்துஉள்ளது.
இதில் காங்கிரஸ் 13 முறையும், ஜனதா கட்சி, ம.ஜ.த., தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 1957- - 2004 வரை சண்டூர் பொது தொகுதியாக இருந்தது. 2008ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின், எஸ்.டி., தொகுதி ஆனது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நடந்த நான்கு தேர்தலிலும், துக்காராம் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் பா.ஜ., ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.
இந்நிலையில், பல்லாரி மாவட்ட அரசியலில் காங்கிரஸ் முகமாக இருந்தவரும், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில் சிக்கி, தற்போது அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம் எஸ்.டி., சமூகத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.
எஸ்.டி., சமூக மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், அச்சமூகத்தை சேர்ந்த நாகேந்திரா முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பதால், அவர் மீது எஸ்.டி., சமூகத்தினர் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனை பயன்படுத்தி சண்டூரில் முதன்முறையாக வெற்றி பெற, பா.ஜ., தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஸ்ரீராமுலு ஆர்வம்
சண்டூர் தொகுதி சீட் எதிர்பார்க்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, சண்டூரில் முகாமிட்டு வேலைகளை செய்து வருகிறார். ஆனால் இவருக்கு சீட் கிடைக்குமா என்று தெரியவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் தோற்று போனதால், என் மீது மக்களுக்கு அனுதாபம் உள்ளது.
இதனை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெறுவேன்;
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஸ்ரீராமுலு கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்ரீராமுலுவின் முன்னாள் நெருங்கிய நண்பரான ஜனார்த்தன ரெட்டி, தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தர முயற்சிக்கிறார்.
சீட் விஷயத்தில் சண்டை போடாமல் யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்தி, அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சண்டூரில் வெற்றி பெற்றால் அது பா.ஜ.,வுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இதற்கிடையில், துக்காராம், தன் மகள் சவுபார்ணிகாவுக்கு சீட் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-- நமது நிருபர் --