ADDED : மார் 15, 2025 06:46 AM
வதோதரா : குஜராத்தில் வதோதராவின் கரேலிபாக் பகுதியில் நேற்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது, கார் அதிவேகமாக மோதியது.
சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சிலர் மீதும் மோதிய பின், அந்த கார் நின்றது. இதில், ஸ்கூட்டரில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து வெளியே வந்த இளைஞர், 'இன்னும் ஒரு ரவுண்டு செல்லலாம்' என, மது போதையில் கூச்சலிட்டபடி தப்ப முயன்றார்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை பிடித்து தாக்கினர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டனர்.
விபத்தில் இறந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காயமடைந்த நபர்களை, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஹேமாலி படேல் என தெரியவந்தது.
இதேபோல், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் ரக்சித் சவுரசியா என்றும், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வதோதராவில் உள்ள சட்டக்கல்லுாரியில் படித்து வரும் இவர், வாடகை அறையில் தங்கியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர், மாணவரின் நண்பரான மிட் சவுகான் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே காரில் வந்துள்ளனர். விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் மக்கள் கூடியதால், மிட் சவுகான் தலைமறைவானார்.