பெங்களூரில் போதை விற்ற 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்
பெங்களூரில் போதை விற்ற 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்
ADDED : பிப் 12, 2025 07:07 AM

பெங்களூரு : பெங்களூரில் போதை விற்பனையில் ஈடுபட்ட, பத்து வெளிநாட்டவர் நாடு கடத்தப்பட்டதாக நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறி உள்ளார்.
இதுகுறித்து நேற்று தனது அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க, சி.சி.பி., போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்களின் முயற்சியால் ஹென்னுார், சிக்கஜாலா, அம்ருதஹள்ளி, வித்யாரண்யபுரா, கோவிந்தபுரா, புட்டனஹள்ளியில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுத்தகுண்டேபாளையா, கலாசிபாளையா, காமாட்சிபாளையா போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 32 கிலோ கஞ்சாவை மீட்டனர். இதன்மதிப்பு 17.50 லட்சம் ரூபாய். ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரான, எங்கள் போர் தொடரும். போதைப்பொருள் இல்லா நகரமாக பெங்களூரை மாற்றுவது எங்கள் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பார்வையிட்டார்.

