சாலை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு
சாலை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு
ADDED : ஜன 13, 2024 11:58 PM

புதுடில்லி: பி.ஆர்.ஓ., எனும் எல்லை சாலை அமைப்பின் ஒப்பந்த தொழிலாளர்கள் 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு பெறும் திட்டத்திற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.
நம் நாட்டின் எல்லைகளில் சாலைகள் அமைக்கும் பணியில் பி.ஆர்.ஓ., ஈடுபட்டுள்ளது. மிகவும் கடினமான நிலப்பரப்பு, சீதோஷ்ண நிலையில் தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.
இந்த சூழலில் பணிபுரியும் போது சில தொழிலாளர்கள் உடல்நலம் பாதிப்பு, விபத்து காரணமாக உயிரிழக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் இவர்கள் இறந்த பின், குடும்பத்தினருக்கு எந்த பண பலன்களும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், பி.ஆர்.ஓ., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ராணுவ அமைச்சகம் சார்பில், 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அந்த திட்டத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார்.
இது பற்றி ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
எல்லை பாதுகாப்பு அமைப்பின் திட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, குழு ஆயுள் காப்பீடு திட்டம் துவங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை ஏற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை பாதுகாப்பு அமைப்பு மற்றும் பொறியாளர் ரிசர்வ் படையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் துவங்க ஒப்புதல் அளித்தார்.
இதன்படி பணியின் போது உயிரிழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு தொகை வழங்கப்படும். நாட்டுக்காக பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இத்திட்டம் சமூக பாதுகாப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

