ADDED : மே 16, 2025 12:28 AM
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி - கூகி பழங்குடியினர் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்ததை அடுத்து, மாநிலத்தில் அமைதி சீர்குலைந்தது.
இதையடுத்து, பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் பைரேன் சிங், கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.
இதை தொடர்ந்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
மணிப்பூர் - மியான்மர் எல்லை அருகே அமைந்துள்ள சந்தேல் மாவட்டத்தின் நியூ சம்தால் என்ற கிராமத்தில், தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினர் நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில், 10 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பெரும் அளவில் கைப்பற்றப்பட்டன.
மணிப்பூரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் முழுவீச்சில் இறங்கிஉள்ளது.
கடந்த, 10ம் தேதி 13 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.