ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு கேரள நபருக்கு 10 ஆண்டு சிறை
ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு கேரள நபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : பிப் 10, 2024 01:06 AM
கொச்சி, கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர், 33, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியானது.
கடந்த 2019ல் அவரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், நம் அண்டை நாடான இலங்கையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஜாஹரன் ஹாசீம் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனரும், மத பிரசாரகருமான ஜாகிர் நாயக் ஆகியோரின் வீடியோக்கள் வாயிலாக இந்த அமைப்பில், இவர் இணைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த அமைப்பின் கொள்கைகளை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அத்துடன், கேரளாவின் கொச்சியில் ஆதரவாளர்களை திரட்டி, பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தியும் உள்ளார்.
இது தவிர, நம் நாட்டில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள சதிசெயல்களை தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அபூபக்கர் மீது, தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மினி எஸ்.தாஸ் தலைமையிலான அமர்வின் கீழ் நடந்து வந்தது.
இதில், நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
கைதான அபூபக்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைஅடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததுடன், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.