ADDED : டிச 31, 2024 05:24 AM
பெங்களூரு: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக பெங்களூரின் பல இடங்களில் நடந்த வாகன சோதனையில் 1,100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு கிழக்கு போக்குவரத்து டி.சி.பி., குல்தீப் குமார் ஜெயின், 'எக்ஸ்' வலைதள பதிவு:
ஆங்கில புத்தாண்டின் போது, பெங்களூரு நகரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய சந்திப்புகளில் இரவும், பகலுமாக போலீசார் கண்காணிக்கின்றனர்.
புத்தாண்டு தினத்தில் மக்கள் அதிகம் கூடும் எம்.ஜி., ரோடு, கோரமங்களா, இந்திரா நகர் ஆகிய இடங்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து, பி.பி.எம்.பி., பெஸ்காம், பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் தீயணைப்பு வாகனம், தடுப்புகள், போக்குவரத்து நெரிசலை தவரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக, மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்வோரின் எண்ணிக்கை அதிகமானதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்படி, பெங்களூரு போக்குவரத்து போலீசார், கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை, பெங்களூரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், பெங்களூரு கிழக்கு பகுதியில், 22,810 வாகனங்கள் உட்பட நகரின் பல பகுதிகளில் 95,179 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 1,1௦௦ பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், அனைவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இது தவிர, 165 பேர் அதிவேகமாக வாகனம் ஓட்டி உள்ளனர். இவர்களிடம் இருந்து 1,65,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த வாகன சோதனை ஆங்கில புத்தாண்டு வரை தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.