UPDATED : அக் 18, 2024 03:49 PM
ADDED : அக் 18, 2024 03:39 PM

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு உலகவங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இரண்டும் சேர்ந்து 13,600 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முன்வந்துள்ளன.
சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலைநகராக்க,சுமார் 15 ஆயிரம் கோடி நிதி அளிக்க உள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள், வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆந்திர அரசின் மூத்த அதிகாரி கூறியதாவது: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு, முதற்கட்டமாக, ரூ.13,600 கோடியை,வரும் 2024ம் ஜனவரி மாதம் விடுவிக்கிறது.
இதற்கான மொத்த திட்டமதிப்பீடு ரூ.15 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய நிதியான ரூ.1,400 கோடியை மத்திய அரசு அளிக்கும்.இந்த திட்டத்திற்கான மொத்த நிதியும், ஐந்து ஆண்டுகளில் பெறப்படும்.
இந்த திட்டத்திற்கு, உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி, கடன் மற்றும் உத்தரவாதம் அளிக்கிறது. மற்ற வங்கியும் ஏடிபியும் தலா ரூ.6,800 கோடி நிதி அளிக்கிறது. உலகவங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளின் கடனை மத்திய அரசு பின்னர் செலுத்தும்.
முதல் கட்டமாக, அடுத்தாண்டு ஜனவரி-30ம் தேதி நிதி அளிக்கப்படும். இந்த நிதியை 5 ஆண்டுகளுக்குள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்.முதல் கட்ட நிதியில் ஆந்திர அரசு எவ்வாறு செயல்படுகிறதோ, அதை பார்த்து இரண்டாவது கட்ட நிதி விரைவாக வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள் மட்டும் உதவ வில்லை, சர்வதேச அளவில் சிறந்த வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கப்பெறுகிறது.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே, சந்திரபாபு நாயுடு, 2014 மற்றும் 2019ம் ஆண்டு காலகட்டங்களில் முதல்வராக இருந்த போது, 34,390 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களில், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக ரீதியிலான பிளாட்டுகள் மற்றும் தலைநகர் பாதுகாப்புக்கான அனைத்து வேலைகளும் நடந்தன.
பின்னர் வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, ஆந்திராவுக்கு 3 தலைநகர் உருவாக்கப்படும் என கூறியது. இந்நிலையில், மீண்டும் முதல்வராகிய சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில், அங்கம் வகிப்பதால், இதற்கான ஏற்பாடுகளை விரைவு படுத்தி திட்ட நிதியை அளிக்குமாறு மத்திய அரசிடம்வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து இந்த திட்டத்திற்கான நிதியை அளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.