மருத்துவ செலவு 14% உயர்வு; இதய நோய் பாதிப்பு அதிகரிப்பு
மருத்துவ செலவு 14% உயர்வு; இதய நோய் பாதிப்பு அதிகரிப்பு
ADDED : செப் 27, 2024 06:21 AM

புதுடில்லி : தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஓராண்டில் மருத்துவச் செலவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதய நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதும், 18 வயதுக்கு குறைவானோருக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அதிகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஏ.சி.கே.ஓ., எனப்படும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், 2024ம் ஆண்டுக்கான இந்திய சுகாதார அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
பெரும் சுமை
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 - 24ம் ஆண்டில் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளுக்கான செலவு 11.35 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2023 - 2024 நிதியாண்டில், 60,000 பாலிசிகளுக்கான மருத்துவச் செலவு கோரல்கள் வந்தன. சராசரியாக, 70,558 ரூபாய் மருத்துவச் செலவாகியுள்ளது. அதே நேரத்தில் முந்தைய ஆண்டில் இது 62,548 ரூபாய்.
இதன்படி பார்க்கும்போது, ஓராண்டில் குடும்பத்தின் மருத்துவச் செலவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, இந்திய குடும்பங்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. கடந்த 2018ல், 'ஆஞ்சியோபிளாஸ்ட்' எனப்படும் இதய சிகிச்சைக்கான செலவு 1 - 1.5 லட்சம் ரூபாயாக இருந்தது. இது, 2024ல் 2 - 3 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் 2030ல் இது, 6 - 7 லட்சம் ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 10 - 15 லட்சம் ரூபாயாக உள்ள சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு, 2030ல் 20 லட்சம் ரூபாயாக உயரும்.
பிரச்னை
தற்போது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் உட்பட சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அதிகம் உள்ளன. இந்த வயதினருக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளில், இது 11 சதவீதமாக உள்ளது.
புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக புற்றுநோய் பாதிப்புக்காக, 31 - 40 மற்றும் 41 - 50 வயதினர் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவது, 2.8 மடங்கு அதிகரித்துள்ளது. அதுபோல, இதய நோய் பாதிப்புக்காக மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை, 31 - 40 மற்றும் 41 - 50 வயது பிரிவினரில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
பிரசவம் தொடர்பான மருத்துவச் செலவு கோரல்களை பார்க்கும்போது, 69 சதவீதம் அறுவை சிகிச்சை வாயிலாகவே நடக்கிறது. 31 சதவீதம் தான் சுகப்பிரசவமாக உள்ளது. மருத்துவச் செலவு உயர்ந்து வருவது, நோய் பாதிப்பு அதிகரித்து வருவது ஆகியவை, தனிநபர் மருத்துவ காப்பீட்டின் தேவைக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.