பி.எம்.டி.சி., ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1.50 கோடி நிவாரணம்
பி.எம்.டி.சி., ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1.50 கோடி நிவாரணம்
ADDED : ஜன 27, 2025 10:12 PM

பெங்களூரு; பி.எம்.டி.சி., ஊழியர்கள் விபத்தில் இறந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு 1.50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க. பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்கள், விபத்தில் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. பி.எம்.டி.சி., ஊழியர்கள் விபத்தில் இறந்தால், 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பி.எம்.டி.சி., நிர்வாகம், ஊழியர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 1.50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி அளித்த பேட்டி:
நாட்டில் எந்த மாநிலங்களின் அரசு ஊழியர்களுக்கும், இந்த சலுகை அளிக்கப்படவில்லை. ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் இறந்தால், 60 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஆனால் பி.எம்.டி.சி., ஊழியர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு, 1.50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. என் உத்தரவுபடி, திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பி.எம்.டி.சி.,யின் 28,000 ஊழியர்கள், இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் பணியில் இருக்கும்போதோ அல்லது பணியில் இல்லாதபோது, விபத்தில் சிக்கி இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு 1.50 கோடி ரூபாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

