சித்தராமையா தாக்கல் செய்த 15வது பட்ஜெட் மதிப்பீடு... ரூ.3.71 லட்சம் கோடி! அங்கன்வாடி ஊழியர்களுக்கு 'ஸ்மார்ட் போன்'
சித்தராமையா தாக்கல் செய்த 15வது பட்ஜெட் மதிப்பீடு... ரூ.3.71 லட்சம் கோடி! அங்கன்வாடி ஊழியர்களுக்கு 'ஸ்மார்ட் போன்'
ADDED : பிப் 17, 2024 05:03 AM

பெங்களூரு, பிப். 17- கர்நாடகாவில், 2024 - 25ம் ஆண்டுக்கான, 3.71 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். இது, அவரது 15வது பட்ஜெட்.
பட்ஜெட்டில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு, முதியோர் வீட்டு வாசலுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம், மேகதாது அணை கட்ட நடவடிக்கை, பீர் மீதான கலால் வரி உயர்வு உள்ளிட்டஅறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், மாநிலத்துக்கு மத்திய அரசு மூன்று அநீதிகளை இழைத்துள்ளதாக முதல்வர் குற்றம் சாட்டினார். இதை கண்டித்து, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வினர் வெளிநடப்பு செய்து, போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில், கடந்தாண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக உள்ள சித்தராமையா, நிதித் துறையைதன்னிடமே வைத்துள்ளார்.
இந்நிலையில், 2024 - 25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா, கர்நாடக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
இது, இவர் தாக்கல் செய்த 15வது பட்ஜெட். இதன் மூலம், மாநிலத்தில் அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சாதனையை அவர் படைத்துஉள்ளார்.
ரூ.46,636 கோடி
முன்னதாக, காலை 9:30 மணிக்கு சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்தி, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார். கடந்தாண்டு, 3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.
இந்தாண்டு, 3 லட்சத்து 71,383 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டை விட இது, 46,636 கோடி ரூபாய் அதிகம்.
இதில், மூலதனம் மற்றும் வருவாய் செலவும் அடங்கும். 3 லட்சத்து 68,674 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வரும் என குறிப்பிட்டார். வருவாயை விட, செலவு அதிகமாக இருப்பதால், இது 2,709 கோடி ரூபாய் துண்டு பட்ஜெட் ஆகும்.
வாக்குறுதி திட்டங்கள்
காங்கிரஸ் அரசின், 'கிரஹ ஜோதி, சக்தி, கிரஹ லட்சுமி, யுவநிதி, அன்ன பாக்யா' ஆகிய ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு கடந்தாண்டு போன்று இந்தாண்டும் 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, 85,818 கோடி ரூபாய் கடன் வாங்கப்படும் என்று அறிவித்த நிலையில், இந்தாண்டு 1லட்சத்து 5,246 கோடி ரூபாய் கடன்வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு, கர்நாடகாவிலும் பீர் விற்பனைக்கான கலால் வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்புதல் பெற்று, நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'அனு சுவிதா'
மாவட்ட கூட்டுறவு வங்கிகளில், 57,000 விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டி 496 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 90 கோடி ரூபாய் செலவில், 75,938 அங்கன்வாடி ஊழியர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளன.
'அனு சுவிதா' என்ற புதிய திட்டத்தின் கீழ், 80 வயது கடந்த முதியோருக்கு, அவர்களின் வீட்டுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி விவசாயம், மகளிர், இளைஞர், தொழில், கல்வி போன்ற பிரிவுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பொய் சொல்வதா?
பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் சித்தராமையா, 'மத்திய அரசு, மாநிலத்துக்குரிய வரி பங்கு, மானியம், நிவாரண நிதியை சரியாக வழங்காமல், மூன்று அநீதிகளை இழைத்துள்ளது' என, குற்றம் சாட்டினார்.
இதற்கு, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரம் தர்ணா நடத்தி, காங்கிரஸ் அரசு மீதுகுற்றஞ்சாட்டி வெளிநடப்பு செய்தனர். பின், விதான் சவுதா வளாகத்தில் உள்ள கெங்கல் ஹனுமந்தையா சிலை முன், இரு கட்சியினரும் போராட்டம்நடத்தினர்.
'பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, ஒன்றும் இல்லை, பொய் சொல்லும் சித்தராமையா' என்று கோஷம் எழுப்பினர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல, பட்ஜெட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், மேலவையிலும், பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
3:14 மணி நேரம்
முதல்வர் சித்தராமையா சரியாக நேற்று காலை 10:16 மணிக்கு பட்ஜெட் புத்தகத்தை வாசிக்க துவங்கினார்.
கன்னட மொழியில் 181 பக்கங்களையும், மதியம் 1:30 மணிக்கு வாசித்து முடித்தார். அதாவது 3.14 மணி நேரத்தில் வாசித்து முடித்துள்ளார்.
இடையிடையே குவெம்பு, ஆய்தக்கி லக்கம்மா, கர்பூரி தாகூர், சித்தலிங்கையா, இப்ராகிம் சுதாரா, சி.என்.ஆர்.ராவ், பசவண்ணர், நேரு ஆகியோர் கருத்துகள், கவிதைகள் வாசித்தும்; கன்னட சினிமா பாடல்கள் பாடியும் மேற்கோள் காட்டினார்.