ADDED : அக் 27, 2024 01:08 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், பள்ளிகளில் குரூப் - சி மற்றும் டி ஊழியர்கள் நியமன ஊழல் விவகாரத்தில் முக்கிய இடைத்தரகரின் 163.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாநில பள்ளிகள் வாரியம் வாயிலாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் வாயிலாக நடந்த நியமனங்களில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், குரூப் - சி மற்றும் டி ஊழியர்கள் நியமனங்களில் லஞ்சம் பெற்று பணிகள் நிரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 3,432 குரூப் - சி மற்றும் டி ஊழியர்கள் நியமனம் செய்த விவகாரத்தில், முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட பிரசன்ன குமார் ராய் என்பவருக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான ஹவுரா, சுந்தர்பான், அலிபுர்துவார் பகுதிகளில் செயல்பட்ட மூன்று ரிசார்ட்டுகள், ஜல்பைகுரி, திகா ஆகிய இடங்களில் செயல்பட்ட இரண்டு ஹோட்டல்கள், அவரது மனைவி காஜல் சோனி ராய்க்கு சொந்தமான நிறுவனங்கள், கடைகள், நிலங்கள் என 163.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில் இடைத்தரகர் பிரசன்ன குமார் ராய், மேற்கு வங்க பள்ளிகள் வாரிய ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா ஆகியோர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.