ADDED : செப் 21, 2024 12:57 AM
தாவணகெரே, கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
கண்காணிப்பு கேமரா
இங்கு தாவணகெரே டவுனில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், ஏரியில் கரைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது, ஊர்வலத்தின் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர்.
இதில், போலீசார் இருவர் காயம் அடைந்தனர். கல் வீசப்பட்டதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், கல் வீசிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திய எட்டு பேரும் கைதாகினர்.
மாண்டியா, நாகமங்களாவில் ஏற்கனவே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல் வீசப்பட்டது பற்றி, தாவணகெரே ஹிந்து அமைப்பின் சதீஷ் பூஜார் என்பவர், சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பேசி இருந்தார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'உங்களுக்கு தைரியம் இருந்தால் சாலைக்கு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்' என்று மற்றொரு சமுதாய பிரிவு தலைவர் சவால் விட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த விநாயகர் ஊர்வலத்தில் சதீஷ் பூஜார் பங்கேற்றார். இதனால், விநாயகர் ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டது தெரியவந்தது.
சமூக வலைதளம்
கல் வீச்சு சம்பவம் குறித்து ஐ.ஜி., ரமேஷ் கூறுகையில், “விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியவுடன், போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வீடுகள், கடைகள் மீதும் கல் வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவாகிஉள்ளன.
“நகரில் அமைதி கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வீச்சு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு, 163 தடை உத்தரவு பிறப்பிக்க தேவை இல்லை,” என்றார்.