கார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலி
கார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலி
ADDED : ஜூலை 13, 2025 01:16 AM

பாலக்காடுகார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், படுகாயமடைந்த தாய், மூன்று குழந்தைகளில், இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் பொல்ப்புள்ளியை சேர்ந்த மாட்டினின் மனைவி எல்சி, 40; பாலக்காடு தனியார் மருத்துவமனை செவிலியர். இவர்கள் குழந்தைகள் அலீனா, 10, ஆல்பின், 6, எமிலி, 4.
நேற்று முன்தினம் காரில் வேலைக்கு சென்று, மாலையில் எல்சி வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும் ஓடி வந்து காரில் ஏறியுள்ளனர். அப்போது, காரில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்தது.
இதில், தாயும், மூன்று குழந்தைகளும் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ஆல்பின், எமிலி இருவரும் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த மற்ற இருவரின் உடல் நிலையும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.