ADDED : அக் 13, 2024 11:04 PM

ராம்நகர்: உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் தன் இரண்டு குழந்தைகளை கொன்ற தாயும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் டி.ஜே.ஹள்ளியில் வசித்தவர் ஸ்வீட்டி, 24. இவருக்கு சிவு என்பவருடன் திருமணமாகி, கபிலா, 2, என்ற மகளும், கபிலன் என்ற 11 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். இதற்கிடையில் ஸ்வீட்டிக்கு, கிரகோரி பிரான்சிஸ், 27, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சமீபத்தில் கணவரை விட்டு விட்டு, குழந்தைகளுடன் கள்ளக்காதலருடன் ஸ்வீட்டி சென்று விட்டார். மனைவி, குழந்தைகளை காணவில்லை என, டி.ஜெ.ஹள்ளி போலீஸ் நிலையத்தில், சிவு புகார் செய்தார். போலீசாரும் விசாரித்தனர்.
இதற்கிடையே, ராம்நகரின் கெம்பேகவுடா சதுக்கம் அருகில் மஞ்சுநாத நகரில் வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். 15 நாட்களுக்கு முன் நள்ளிரவில், உடல்நிலை பாதிப்பால் மகள் கபிலா இறந்ததாக கூறி, உடலை ஸ்வீட்டியும், பிரான்சிசும் ராம்நகரின் மயானத்துக்கு கொண்டு வந்து எரித்தனர்.
இந்நிலையில், 11 மாத குழந்தை கபிலன் உடலை, நேற்று காலை அதே மயானத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இது பற்றி காவலாளி விசாரித்து உள்ளார். குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இறந்ததாக இருவரும் கூறி உள்ளனர்.
கடந்த 15 நாட்கள் இடைவெளியில், இரண்டு குழந்தைகள் இறந்ததால் காவலாளி சந்தேகம் அடைந்தார். அதுமட்டுமின்றி குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதையும் கவனித்தார். எனவே ஸ்வீட்டி, பிரான்சியை ரகசியமாக மொபைல் போனில் படம் எடுத்து கொண்டு, ராம்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த போலீசார், ஸ்வீட்டையும், பிரான்சிசையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். குழந்தைகளை கொலை செய்தது அம்பலமானது.
தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், 15 நாட்களுக்கு முன், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மகளை கழுத்தை நெரித்து ஸ்வீட்டி கொலை செய்துள்ளார். நள்ளிரவு மயானத்துக்கு கொண்டு வந்து எரித்துள்ளனர்.
இதேபோன்று நேற்று முன் தினம் இரவு உல்லாசமாக இருந்த போது, குழந்தை கபிலன் அழுதது. இதனால் கோபமடைந்த இருவரும், குழந்தையை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.