மேலும் 2 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., அரசுக்கு ஆதரவு: அசாமில் காங்.,குக்கு பின்னடைவு
மேலும் 2 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., அரசுக்கு ஆதரவு: அசாமில் காங்.,குக்கு பின்னடைவு
ADDED : பிப் 15, 2024 05:17 AM

குவஹாத்தி: அசாமில், ஆளும் பா.ஜ., அரசுக்கு, ஏற்கனவே, காங்கிரசைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் இருவர் ஆதரவு அளித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தற்போது மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கமலக்யா டே புர்காயஸ்தா, 46, பசந்தா தாஸ், 52, ஆகியோர், சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு சென்று, பா.ஜ., அரசுக்கு ஆதரவளிப்பதாக, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கும் கமலக்யா டே புர்காயஸ்தா, 2021 சட்டசபை தேர்தலில் கரீம்கஞ்ச் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சமீபத்தில் தான், காங்., செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மங்கள்டோய் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பசந்தா தாஸ், அமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவு வழங்கிஉள்ளனர்.
இதுகுறித்து, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கமலக்யா டே புர்காயஸ்தா, பசந்தா தாஸ் ஆகியோர், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில், வெளியில் இருந்தபடி எங்களுக்கு அவர்கள் ஆதரவு தருவர்,'' என்றார்.
ஏற்கனவே, காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் சசி காந்த தாஸ், சித்தேக் அகமது ஆகியோர், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் இருவர் ஆதரவு வழங்கியுள்ளது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

