ADDED : டிச 14, 2024 12:46 AM
பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் நேந்திரா மற்றும் புன்னுார் கிராமங்களையொட்டிய வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் திடீரென சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்ததில், இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் உயிரிழந்த இரு நக்சல்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் ஒரு துப்பாக்கி, நக்சல்கள் தொடர்புடைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக நேற்று முன்தினம், நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் பாஸ்தா பகுதியில், இந்த ஆண்டு மட்டும் 217 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.