UPDATED : மார் 14, 2024 04:55 PM
ADDED : மார் 14, 2024 02:13 PM

புதுடில்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிக்கு கேரளாவைச் சேர்ந்த ஞானேஸ்வர் குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நம் நாட்டில் தேர்தல் நடைமுறைகளை நிறைவேற்றும் தலைமை தேர்தல் கமிஷன், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் தலைமையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். பிரதமர் தலைமையில், மத்திய அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய உயர்மட்டக் குழு அளிக்கும் பரிந்துரையை ஏற்று, ஜனாதிபதி இந்த நியமனத்தை செய்கிறார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷனர் அனூப் சந்திர பாண்டே கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் லோக்சபா தேர்தல் திட்டமிட்டப்படி மே மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புதிய இரண்டு தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்வதற்காக, இன்று தேர்தல் குழு கூட்டம்நடந்ததாக கூறப்படுகிறது. இதில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிக்கு கேரளாவைச் சேர்ந்த ஞானேஸ்வர் குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

