ADDED : ஜூன் 22, 2025 08:59 PM
மதுரா:சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய, இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் விஷவாயு சுவாசித்து உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவன் நகர் விருந்தினர் மாளிகை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய, நேற்று முன் தினம் மாலை இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் நரேந்திரா, 38, மற்றும் சோட்டாலால், 40 ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கினர். உள்ளே இறங்கிய அடுத்த நிமிடமே விஷவாயுவை சுவாசித்த இருவரும் மயங்கினர். மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒப்பந்ததாரை கைது செய்தனர். பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க இருவரையும் வற்புறுத்தியதாக இருவரின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்து இரு குடும்பத்தினரையும் அரசு அதிகாரிகள் சமரசம் செய்தனர். இரு உடல்களும் மதுரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.