ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 20 பேர் பரிதாப பலி
ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 20 பேர் பரிதாப பலி
UPDATED : அக் 24, 2025 10:03 PM
ADDED : அக் 24, 2025 07:27 AM

அமராவதி: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 39 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், இரண்டு பேர் சிறுவர்கள்.இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன.
பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மீது நேருக்கு நேர் மோதி தீப்பற்றியது என விசாரணையில் தெரியவந்தது. இதில் பைக் ஓட்டி வந்த சிவக்குமார் என்ற வாலிபர், அதே இடத்தில் உயிரிழந்தார். பஸ் டிரைவர், பஸ்சில் இருந்து குதித்து கண்ணாடியை உடைத்து மற்ற பயணிகளை காப்பாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து கருகி விட்டன. அவற்றை டி.என்.ஏ., சோதனை மூலம் அடையாளம் காண ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பஸ் தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

